செவ்வாய், 5 ஜூன், 2012

ஒற்றன்

பொன்னியின் செல்வன்   - ஆழ்வார்கடியான்  ஒரு புரியாத புதிர்

தலைப்பை பார்த்துவிட்டு இங்கே வந்ததும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா ? அது இன்ப அதிர்ச்சியா ? இல்லை கடுப்பில் வந்த அதிர்ச்சியா ?  என்பதை இபோதைக்கு ஒத்தி வைத்துவிட்டு பதிவை படித்துவிட்டு அப்புறம் பின்னுட்டம் பகுதியில் உங்கள் கொலைவெறியை தீர்த்துக்கொள்ளவும்.பொன்னியின் செல்வன் நாவலை  படிக்காதவர்களை படிக்க வைக்கும்  ஒரு சிறிய முயற்ச்சி.
பொன்னியின் செல்வன் படித்து முடித்ததிலிருந்து அதைப்பற்றி ஏதாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற தீ என்னுள் கனன்று கொண்டிருந்தது. அதற்கான நேரம் இப்போது தான் கிடைத்தது. சரி மொக்க போட்டது போது விசயத்துக்கு வான்னு நீங்க சொல்லறது தெரியுது... இனிமேலும் உங்கள கடிக்க மாட்டேன் தொடர்ந்து படிக்கவும்.

பொன்னியின் செல்வன் சரித்திர நாவலின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று தான் இந்த ஆழ்வார்கடியான். கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணிப்பவர்கள் இருவர், அவர்களில் ஒருவன் கதையின் நாயகனாக அறியப்படும்  வாணர்குல வீரன்  பொன்னியின் செல்வனின்(அருள்மொழி வர்மன்)   அண்ணன் ஆதித்த கரிகாலனின் நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவன். கதையின் பிற்பகுதியில் இந்த வந்தியதேவன் அருள்மொழி வர்மனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவனுக்கும் உயிர் தோழனாகிறான்.  மற்றொருவன்  வைஷ்ணவத்தை வெறித்தனமாக பின்பற்றும் ஆழ்வார்கடியான்.கல்கி அவர்கள் அழ்வார்கடியானின் தோற்றத்தை மிகவும் அழகாக   இவ்வாறு விவரிக்கிறார் "கையில் ஒரு குறுந்தடியும், தலையின் பின்புறத்தில் ஒரு சிறிய குடுமியுடன்,  சற்று குள்ளமான உருவம்". இதன் பிறகு ஆழ்வார்கடியான் பாத்திரம் நாவலில் வரும்போதெல்லாம் அவர் உருவம் நம் கண்முன் வந்து செல்வதை தவிர்க்க முடியாது.

 இந்த இரு காதப்பதிரங்களும்(வந்தியதேவன் ,ஆழ்வார்கடியான்)  பல இடங்களில் ஒன்றையொன்று பரிகாசம் செய்வதும், ஒருவரை ஒருவர் ஆபத்திலிருந்து காப்பது போலவும் சொல்லப்பட்டிருக்கும்.  நாவலின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த ஆழ்வார்கடியான் யார்? ஏன் கதை முழுவதும் வந்தியத்தேவன் மற்றும் பலரையும் பின்தொடர்ந்து பல ரகசியங்களை அறிந்து கொள்கிறார் என்று தெரியும். இந்த இரு கதாபத்திரங்களின் உதவியால் தான், எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து சோழர்களின் வரலாற்றிலே முக்கியமான அரசனும்  தெற்கு ஆசியாவில் வெற்றிக்கொடி நாட்டியவனும், காலத்தால் அழியாத தஞ்சை பெரிய கோவிலை கட்டியவனுமான இராஜராஜ சோழன் சோழ அரசை காப்பற்றினான்.

நாவலின் ஆரம்பத்தில் ஆழ்வார்கடியான்  வைஷ்ணவத்தை வெறித்தனமாக பின்பற்றுபவராகவும், சைவர்களுடன் தர்க்கம் புரிபவராகவும் சொல்லப்படிருக்கும், அதன் பிறகு இலங்கையில் வந்தியதேவன் உடன் சேர்ந்து பொன்னியின் செல்வரை சோழ தேச தலைநகருக்கு கொண்டுவர அவர் செய்யும் முயற்சிகளும் அதில் தோல்வியடைந்து  வந்தியதேவனையும் , பொன்னியின் செல்வரையும் விட்டுவிட்டு தமிழகம் வந்து மீண்டும் அவர்களை அடைந்து அருள்மொழி வர்மர் அவருடைய தந்தை சுந்தர சோழனை அடையும்  வரையும்  உடன் இருப்பார்.

அதன் பிறகு   நாட்டில்  நடைபெறும் பல  குழப்பங்களில் இருந்து அரசை காப்பற்ற அவர் எடுக்கும் பல முயற்ச்சிகள் அபாரமானவை. இறுதியில் சுந்தர  சோழரால் சந்தேகபடும் போதுதான் மற்றவர்களுக்கு இவர் ஒரு ஒற்றன் என்பது அநிருத்த பிரம்மராயர் மூலம் தெரியவரும்.இதற்கிடையில் ஆழ்வார்கடியான், கதையின் வில்லியாக அறியப்படும் நந்தினியின் அண்ணன் என்று அறிய வரும் போது அவர் மீது ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க இயலாது. நந்தினியை சோழ தேசத்தை கைப்பற்றும் முயற்ச்சியில் இருந்து விடுவிக்க எவ்வளவோ முயற்ச்சி செய்தும் தோல்வியடைவது பரிதாபத்திற்குரியது.

மொத்தத்தில் ஆழ்வார்கடியான் கதாப்பாத்திரம் இந்த நாவலி படிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு கதாபாத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை.மேலும் சில கதாபாத்திரங்களை பற்றி வரும் பதில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக